தமிழர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம்
ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்துத் தமிழர்களுக்கும் இதுதான் உடை
என்று ஏதும் இல்லை. எனினும், வேட்டி, சேலை, தாவணி, பாவாடை போன்றவை தமிழரின் மரபார்ந்த உடைகளாகக் கருதப்படுகின்றன. நகர்ப்புறங்களில் சல்வார் கமீஸ், சுரிதார், முழுக்காற்சட்டை, ஜீன்ஸ் போன்ற உடைகள் அணியும் போக்கு கூடி வருகிறது.
29 Jun 2012
28 Jun 2012
வாழ்வியல் - தமிழர் சமையல்
உணவு
தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை
மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின்
சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு
நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன்
சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.
பல்வகை மரக்கறிகள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. சோறும் குழம்பும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். குழம்புகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரைவகை, மசியல், மீன்கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் குழம்புகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.
27 Jun 2012
தமிழர் மெய்யியல்
தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன்
அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்குகின்றார்கள் என்பதைத் 'தமிழர்
மெய்யியல் எனலாம். தமிழர் மெய்யியலை அறநூல்களில் இலக்கியங்களில்
மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து
கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை.
சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல்
மாறும். அப்படியே தமிழர் மெய்யியல் மருவி வந்திருக்கிறது. எடுத்துக்காட்டக
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனத் தமிழ் மகளிர் கட்டுப்படுத்தப்பட்டனர்.
இன்று துணிவு, அறிவு, திறமை என்று நவீனப் பெண்களாகத் தம்மை
வளர்த்துக்கொண்டனர்.
தமிழர் மெய்யியல் உலகின் தன்மை (அகம், புறம்), வாழ்வின் நோக்கம் (அன்பு,
அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்தலில் ஒழுக்கம் (அறக் கோட்பாடு)
ஆகியவற்றை விளக்குகின்றது. தமிழரின் பண்டைய வாழ்வியலைத் திணைக் கோட்பாடு
விளக்குகிறது. இன்றைய உந்துதலைத் திராவிடம் எடுத்துரைக்கிறது.
26 Jun 2012
சித்தரியல் & தமிழர் சமயம்
சித்தர்கள், சித்த மருத்துவம்
தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒரு முரண்பாடான, ஆக்கபூர்வமான உறவை சித்தர்கள்
வைத்திருந்தார்கள். இவர்கள் பெரும் சமய மரபுகளின் குறைகளை
எடுத்துகூறினார்கள். மரபுவழிப் புலவர்கள் பலர் இன்ப அல்லது போற்றி
இலக்கியங்களில் மட்டும் ஈட்பட்டிருக்க சித்தர்கள் மருத்துவம், கணிதம்,
வேதியியல், தத்துவம், ஆத்மீகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு தமிழர்
சிந்தனைச் சூழலைப் பலப்படுத்தினார்கள்.
சமயம்
தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயுத
போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர்
வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும்
பின்பற்றியும் வந்துள்ளார்கள். பெளத்தம், சமணம், இந்து, இசுலாம், கிறித்தவம்
ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு
போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். பெரும்பாலான தமிழர் தமது கடவுளாக முருகனை வணங்குகின்றனர். முருகனை விட அய்யனார், மதுரை வீரன், கண்ணகி (கடவுள்), இசக்கி அம்மன், கறுப்புசாமி, சுடலை மாடன் ஆகிய காவல் தமிழ்க் கடவுள்கள் வழிபாடும் பரவலாக இருக்கின்றது.
நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான்.
இன்று திருக்குறளைப்
பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு
இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள்
அமைகின்றன. அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை (Agnosticism), உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.
25 Jun 2012
தமிழர் நாட்டுப்புறவியல்
ஒப்பாரி - மகனைப் பலிகொடுத்த தாய்
நீ போருக்கு போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா மகனே பாரத்துவக்கெடுத்தோ உங்களுக்கு பயந்தவெடி வச்சானோ உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ உங்கள பேசாமல் சுட்டெறிந்தான் மகனார் உன்ன சந்தியல கண்டடத்தை உன்னைபெத்த கறுமி தலைவெடித்துப் போறனையா |
தமிழர் பண்பாடு இலக்கியம், நுண்கலைகள், நுட்பம் ஆகிய பெரும்
மரபுகளையும், பொது மக்கள் பங்களித்து எளிமையாக ஆக்கி பகிர்ந்த
நாட்டாரியலையும் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒரு சமூகத்தின் வெவ்வேறு
வேட்கைகளை நிவர்த்தி செய்கிறது. மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, வாய்மொழி
இலக்கியங்கள், பாட்டு, இசை, ஆடல்கள், உணவு, உடை, உறையுள், நம்பிக்கைகள்
முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது.
பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ.கா: 2008 - தமிழ்நாடு 53%)
வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்துக் கூறுகளைச் சிறப்பாகச் சுட்டி நிற்கிறது.
எனினும் இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புற சேரிகளில்
இருந்து தோன்றிய கானா பாடல்கள்,
ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு
சுட்டலாம். சினிமா போன்ற பெரும் ஊடகங்கள் நாட்டார்கலைகளை நலிவடையச்
செய்திருந்தாலும், இணையம் போன்ற சில நவீன தொழில்நுட்பங்கள் அனைவரும்
பங்களித்து பயன் பெறும் ஆக்க முறைகளை ஊக்குவிக்கின்றன.
24 Jun 2012
நகைச்சுவை & பேச்சுக்கலை
நகைச்சுவை
நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. என்.எஸ்.கிருஸ்ணன், சந்திரபாபு, தங்கவேல், நாகேஷ் ஆகியோர் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்கள் ஆவர். வடிவழகன், லியோனி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட மேடைச் சிரிப்புரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரோடு மகேஸ், மதுரை முத்து ஆகியோர் நல்ல மேடைச் சிரிப்புரையாளர்கள்.
பேச்சுக்கலை
அரசியல் மேடையில், கோயிலில், பட்டிமன்றத்தில், நீதிமன்றத்தில்,
நாடகத்தில், திரைப்படத்தில், ஒலிபரப்பில், எனப் பல துறைகளில் தமிழில்
பேசுதல் ஒரு பயன்மிகு கலையாகும். அண்ணாத்துரை, பெரியார், ம. பொ. சிவஞானம், கிருபானந்த வாரியார் போன்றோர் சிறந்த பேச்சாளர்கள். திரைப்படத்தில் வசனம் பேசுவதில் சிவாஜி கணேசன் புகழ் பெற்றவர். இன்று கருணாநிதி, வைகோ, சீமான், சுகிசிவம் ஆகியோர் சிறந்த பேச்சாளர்களில் சிலர். தமிழகத்தில் சிறந்த பேச்சாளரைத் தேர்தெடுப்பதெற்கன நடாத்தப்பட்ட தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு நிகழ்ச்சியில் விசயன் வெற்றி பெற்றார். ஈழத்து பேச்சுப்பாரம்பரியம் ஆறுமுகநாவலர்
போன்ற சமயப்பிரசங்கிகள் முதல் அரசியல் பேச்சாளர்கள் ஈறாக பலவகையில்
வளர்ச்சிபெற்று உள்ளது. போராட்ட காலங்களில் பல போராளிகளின் பேச்சுக்கள்
மக்களுக்கு விடுதலை வேட்கை தூண்டுவதில் முன்னின்றன. இலக்கிய
சொற்பொழிவுகளில் கம்பன் கழகத்து இலங்கை ஜெயராஜ் போன்றவர்கள் பரவலாக அறியப்பெற்றாவர்கள்.
22 Jun 2012
திரைப்படக்கலை

தமிழ்த் திரைக்கலை அல்லது தமிழ்ச் சினிமா தற்காலத்தில் தமிழ்ச்
சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் ஒரு கலைத்துறை ஆகும். தமிழ்ச்
சினிமாவே இந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழித் திரைப்பட செல்வாக்கை தமிழர்
மத்தியில் தவிர்த்தது. நாடகம், இசை, ஆடல், சிலம்பம் எனப் பல்வேறு மரபுக்
கலைகளையும் தமிழ்த் திரைக்கலை பயன்படுத்திக்கொண்டது. சிவாஜி, எம். ஜி. ஆர், ரஜினிகாந்த், கமல்காசன், கே. பி. சுந்தராம்பாள், மனோரமா ஆகிய நடிகர்களும் கே. பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா ஆகிய இயக்குநர்களும் தமிழ்த் திரைப்படத்துறையில் புகழ் மிக்க சிலர். தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் இளையராசா, ஏ.ஆர்.ரகுமான்
ஆகியோர் புகழ்பெற்ற சிலர். தமிழ்த் திரைப்படங்கள் "வாழ்க்கையைச்
சிதைத்துப் பிரதி பலிக்கின்றது. பொய்மைகளைத் தீர்வுகளாகப்
புலப்படுத்துகின்றன" போன்ற பல விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது.
20 Jun 2012
தமிழர் தற்காப்புக் கலைகள் & யோகக் கலை
தற்காப்புக் கலைகள்

நடனம், இசை, மொழி போன்றே
ஒவ்வொரு இன, மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபை கொண்டிருக்கின்றது.
தென்னிந்தியாவில்
இருந்த நாடுகள் தம்மோடும்
பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு கூறாகத் தற்காப்புக்
கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ, சேர, சோழ,
பாண்டிய
நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய
சண்டை, தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைக்
குறிக்கின்றது. சிலம்பம்,
வர்மக்கலை,
குத்துவரிசை,
அடிதடி,
மல்லாடல்
ஆகியவை இன்றும் பயிலப்படும் தமிழர் தற்காப்புக் கலைகள் ஆகும்.
யோகக்கலை

இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது "யோகாசனம்"
ஆகும். இந்தக் கலையை நீண்ட காலமாகத் தமிழர்கள் பயின்றும், அதற்குப் பங்களித்தும்
வந்துள்ளார்கள். யோகக்கலை பற்றியும் அதன் இதர பாகங்களைபற்றியும் தமிழ் நூலான திருமந்திரம்
மிக அழகாக எடுத்துரைக்கிறது. அண்மையில் தமிழ்நாடு
அரசு அனைத்து மாணவர்களுக்கும் யோகக்கலையை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்துள்ளது. சுவாமி
சிவானந்தா, யாழ்ப்பாணம்
யோகர்
சுவாமியின் சீடரான சத்யகுரு
சிவாய சுப்ரமணியசுவாமி, சுவாமி
சச்சிதானந்தா, வேதாத்திரி
மகரிசி போன்றோர் யோகக்கலையை மேற்கு நாடுகளில் பயிற்றுவிக்கப் பெரும் பங்களிப்பு
செய்துள்ளார்கள்.
18 Jun 2012
தமிழர் ஆடற்கலை
ஆடலைக் கூத்து என்றும் நாடகத்தை 'கதை தழுவி வரும் கூத்து' என்றும் கூறுவர். தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உள்ளன. ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்கால்குதிரை என பல நாட்டுபுற கலையின் நடன வகைகளும் உண்டு.
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும்.
இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்
பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர்
வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
16 Jun 2012
தமிழர் நாடகக்கலை& தமிழிசை
நாடகக்கலை
இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில்
ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தித் தொன்று தொட்டு தமிழர், நாடகக்கலையில்
ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில்
நாடகம் பற்றி பல குறிப்புகள் உள்ளன. தமிழர் நாடகங்கள் தமிழர் சூழமைவு
கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.
இசைக்கலை
தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாக செம்மை பெற்றது. தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் நூலில் இசையைப்
பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும்,
சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் இசை
நயத்துடன் கூடிய பாடல்களைக் காணலாம்.
14 Jun 2012
தமிழர் ஓவியம்
ஓவியம் ஒரு கவின் கலை. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களை தமிழர் ஓவியம் எனலாம். ஓவியத்தைச் சித்திரம் என்றும் குறிப்பிடுவர்.
சங்க காலத்தில் இருந்தே தமிழரிடையே ஓவியக்கலை வளர்ச்சி இருந்தது.இருப்பினும் தமிழ் ஓவியங்களுக்கு ஒரு தொடர்ச்சியான மரபு இல்லை. "சற்று
முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து
வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல
நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம்." தற்காலத்தில் ஓவியக்கலையில் ஒரு புதிய ஈடுபாடு இருக்கிறது. வரைகதை, வரைகலை, இயங்குபடங்கள் என்று பல்வேறு வடிவங்களில் இந்த ஆக்க ஊற்றுகளைக் காணமுடியும்.
13 Jun 2012
தமிழர் சிற்பக்கலை
சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல்
ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள்
உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர்
வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.
11 Jun 2012
தமிழர் கட்டிடக்கலை
தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக
வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக்
கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறித்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும்,
வணக்கத்தலங்களும், பொதுக் கட்டடங்கள் பலவும் உருவாக்கப்பட்டிருக்கும்
என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால்
கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.
ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நாட்டில் கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின்
உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான
வீடுகளையும் கட்டடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும்
இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டடக்கலை
எனப்படுகின்ற கட்டடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில்
ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டடங்கள் இருக்கத்தான்
செய்கின்றன.
9 Jun 2012
தமிழர் பண்பாடு
தமிழர் பண்பாடு தமிழ்
மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள்,
வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள்
ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
தமிழர் பண்பாடு பல காலமாகப் பேணப்பட்டு, திருத்தப்பட்டு,
மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு
உட்பட்டு நிற்கும் ஒர் இயங்கியல் பண்பாடே.

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள்
7 Jun 2012
இடைக் கால இலக்கியம்& தற்கால இலக்கியம்
இடைக் கால இலக்கியம்
கி.பி 1200-இலிருந்து கி.பி 1800-வரையுள்ள காலப்பகுதி இடைக் காலம்
எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மாராத்தியர்,
ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர்.
இக்காலமே தமிழ் இசுலாமிய இலக்கியம், தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவற்றின்
தோற்றக்காலம் ஆகும். முதல் தமிழ் அகரமுதலி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான வீரமாமுனிவர் என்று அறியப்படும் கிறித்தவ மத ஆசிரியரால் கி.பி 1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலான நிகண்டுகள் இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே.
தற்கால இலக்கியம்
18-ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம்.
இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத்
தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர்
உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்துப்
பாதுகாத்தனர். 1916-ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமற்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராகச் சுப்பிரமணிய பாரதியார் கருதப்படுகிறார். இக்காலத்தில் புதுக் கவிதை பிறந்தது. உரைநடை வீச்சு பெற்றது. புதினம், சிறுகதை, கட்டுரை ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954-1968 காலப்பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம்
பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில்
மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்குப் போக்குகள் இனங்காணப்பட்டன. திராவிட இயக்கத்தினர்
தமிழைக் கருவியாக பயன்படுத்தித் தமது கருத்துக்களை மக்களுக்கு
எடுத்துச்செல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்கலாத்தில் பெண்ணிய
கருத்துகளையும் எடுத்துரைத்த அம்பை, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, உமாமகேஸ்வரி, இளம்பிறை, சல்மா, வெண்ணிலா, ரிஷி, மாலதி (சதாரா), வைகைச்செல்வி, தாமரை
உட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வலுப்பெற்று
இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துகளும் தமிழ் இலக்கியத்தில்
சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்,
இணையம் எனப் பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. அறிவியல் தமிழின்
அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக்
குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதே வேளை தமிழ்நாட்டில்
பரவலாகப் புழங்கும் தமிங்கிலம் தமிழ் மொழிப் பேணலை சரவலுக்கு உட்படுத்தியிருக்கிறது.
6 Jun 2012
சங்கம் மருவிய கால இலக்கியம்& பக்தி கால இலக்கியம்
சங்கம் மருவிய கால இலக்கியம்
கி.பி 300-இலிருந்து கி.பி 700-வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே பெளத்த தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சமண தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசி தமிழில் எழுந்த முதல் தர்க்க நூலாகக் கருதப்படுகிறது.
பக்தி கால இலக்கியம்
கி.பி 700-இலிருந்து கி.பி 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் தமிழ்ப் பக்தி இயக்கம் வலுப்பெற்றதது. சைவமும் வைணவமும் ஆதரவு பெற்றன. சைவ நாயன்மார்கள் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவ ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றன. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதினான்கு சைவ சிந்தாந்த நூற்களும் இயற்றப்பட்டன. கலிங்கத்துப்பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. கி.பி 850-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 1250-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசு சிறப்புற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
5 Jun 2012
சங்க இலக்கியம்
தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள்மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் செடிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகை நூற்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் திருக்குறள், இன்றும் அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறை.
4 Jun 2012
மொழியும் இலக்கியமும்
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழைத்
தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ், சமற்கிரதத்துக்கு இணையாக இந்திய
நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால்
அதிகாரப்பூர்வமாக 2005-ஆம் ஆண்டு தமிழே முதலாவதாக செம்மொழி என
ஏற்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ், அரச
அலுவல் மொழியாகவும் இருக்கிறது.
2 Jun 2012
சமூக அமைப்பு
தமிழர் சமூக அமைப்பு சாதிய
படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. தமிழர் சமூக
அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்காலத்தில் சமூக
எதிர்ப்புப்போராட்டங்கள், சாதீயத்துக்கு எதிரான அரசியல் சட்ட
நிலைப்பாடுகள், நகரமயமாதல், பொருளாதார முன்னேற்றம், நவீனமயமாதல் போன்ற பல
காரணிகள் சாதிய கட்டமைப்பைத் தளர்த்தி உள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலை
வாய்ப்புக்கள் பல மடங்கு பெருகி உள்ளன. அரசியல் சட்ட உரிமைகளும் கோட்பாட்டு
நோக்கில் சமமாக உள்ளன. திராவிட இயக்கத்தின் இறைமறுப்பு கொள்கை, அறிவியல் வளர்ச்சி ஆகியவை சமயம் மீதான தீவிர நம்பிக்கையைக் குறைத்துள்ளன.
1 Jun 2012
வட அமெரிக்காவில் தமிழர்
வட அமெரிக்காவில் கணிசமான தமிழர் வாழ்கின்றனர். 1950-களுக்குப் பின்னர்
வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் தேடி தமிழர் வட அமெரிக்காவுக்கு வரத்
தொடங்கினர். 1983-இல் இலங்கையில் வெடித்த கறுப்பு யூலை
இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா, ஐக்கிய
அமெரிக்காவுக்குச் சென்றனர். இன்று கனடாவில் 250,000-க்கும் மேற்பட்ட
தமிழர்களும், ஐக்கிய அமெரிக்காவில் 50,000-க்கும் மேற்பட்ட தமிழர்களும்
உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)